மயிலுகள் ஊரில் இருந்த நாட்களில் சிட்டுக்குருவி, நார்த்தங் குருவி, தவிட்டுக்குருவி, மைனா, மடையான், புறா, கிளி, குயில், காகம், காடை, கொக்கு என கண்ணில் தென்பட்ட பறவைகள் அதிகம்.
பெயர் தெரியாத பறவைகளும் உண்டு. தன் சின்ன சிறகுகளை வைத்துக்கொண்டு வேலி முட்களுக்குள் நுழைந்து நுழைந்து தவிட்டுக்குருவி இரை தேடும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம். மூக்கின் நுனியில் மஞ்சளை வைத்திருக்கும் நார்த்தங்குருவி பிடித்து நானும் பத்தும் வளர்த்த கதையும் உண்டு. சிலோன் ராவத்தர் தோப்பின் தென்னமரப் பொந்துகளில் பார்த்த கிளிகள் பறந்துகொண்டே இருக்கின்றன. கீழகுளத்தில், வடக்குசேத்தி வயல்பரப்புகளில், வெள்ளையாற்றங்கரை மேடுகளில் மேய்ந்த கொக்குகள் வெண்மேகமாய் தெரிகின்றன.