சிம்பு திருமணத்தைப் பற்றி கேட்காதீர்கள்: கண்கலங்கிய டி.ராஜேந்தர்

சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் டி.ராஜேந்தர் கண்கலங்கினார். 

என்னுடைய இளைய மகன் குறளரசன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. நான் என் மகனுடைய திருமணத்திற்கு பலருக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது. அதனால் பல பத்திரிகையாளர்களை என்னால் வரவேற்க முடியாமல் போனது.

சிம்பு மற்றும் என்னுடைய வளர்ச்சியில் ஊடகத்துறையினர் பங்கு அதிகம். ஓ.பி.எஸ், மு.க.ஸ்டாலின், உதயநிதி , திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள், நடிகர்கள் என வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பலரை என்னால் அழைக்க முடியாமல் போனதிற்கு வருந்துகிறேன்.

சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் மதங்களுக்கு அப்பாற்பட்ட காதலை ஏற்றுக்கொள்பவன். அதனால்தான் குறளரசன் விரும்பியபடி திருமணம் நடைபெற்றது.

பிள்ளைகள் ஆசைப்பட்டதுபோல் திருமணம் நடத்தி வைக்கும் தாய் தந்தையாக எல்லாரும் இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து சிம்புவுக்கு எப்போ திருமணம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் இப்படி கேள்வி கேட்கும் நிலைக்கு இறைவன் என்னை வைத்துள்ளதும், விதி என்னை வைத்துள்ளதும் வருத்தமாக உள்ளது.

தற்போது அந்த கேள்விக்கு பதில் அளிக்கும் நிலையில் நான் இல்லை என கண்ணீர் மல்க டி.ராஜேந்தர் பேசினார்.

இதற்கு மேல் கேள்வி கேட்க வேண்டாம் என்று கூறி வருத்தத்துடன் பேட்டியை முடித்துக் கொண்டார்.