திருட்டுபயலே-2 : திரை விமர்சனம்..

திருட்டுபயலே-2 : திரை விமர்சனம்


தமிழ் திரையுலகில் திருட்டுபயலே படம் மாபெரும் வெற்றி பெற்றது.வித்தியாசமான கதையமைப்பில் ,இயக்குனர் சுசி கணேஷன் இயக்கத்தில் யாரும் பெரிதும் எதிர்ப்பார்க்காமல் இருந்து வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய படம் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக திருட்டுபயலே-2 வெளிவந்துள்ளது, அதுவும் முதல் பாகம் அளவிற்கு ரசிக்க வைத்ததா? பார்ப்போம்.

கதைக்கரு

பாபி சிம்ஹா காவல்துறையில் நேர்மையாக ஒரு நபராக தன் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றார். தன் பணியில் என்றும் நேர்மையாக உள்ளதால் பல ஊர்களுக்கு மாற்றுகின்றனர், காரைக்குடியில் இருக்கும் அமலா பாலை காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்கின்றார்.

அப்போது பெரிய மந்திரி, முக்கிய பிரமுகர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டுபிடிக்க பாபி சிம்ஹாவை ஒரு ரகசிய வேலையை செய்ய சொல்கின்றனர். அதாவது அவர்கள் பேசும் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை.

அப்படி பாபி சிம்ஹா ஒட்டு கேட்கும் போது அதில் பிரசன்னா பல திருமணம் ஆன பெண்களை மயக்கி பேசி வருவது தெரிகின்றது. ஒரு நாள் யதார்த்தமாக அந்த போன் காலில் அமலா பால் வாய்ஸ் கேட்க, அதை தொடர்ந்து பாபி சிம்ஹாவிற்கும், பிரசன்னாவிற்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பாபிசிம்ஹா தன் திரைப்பயணத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் போல, கருப்பனை தொடர்ந்து இதிலும் தனக்கான கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார். ரொமான்ஸில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்துள்ளார், ஆனால், இன்னும் சில இடங்களில் சொதப்பல் தெரிகிறது.

பிரசன்னா இவரை இதுபோல் ஒரு சில படங்களில் பார்த்திருப்போம், ஆனால், ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்துக்கொண்டு பல பெண்களை இவர் மயக்குவது, பாபிசிம்ஹாவிடம் மாட்டிக்கொண்டு கூட அவர் அலட்டிக்கொள்ளாமல் அவரிடமே டீல் பேசுவது என மிரட்டியுள்ளார். இன்னமும் பிரசன்னாவை தமிழ் சினிமா எப்போது தான் நன்றாக பயன்படுத்துமோ? என்று கேட்க தோன்றுகின்றது.

முதல் பாகத்தில் அப்போது பேமஸாக இருந்த வீடியோ மூலம் பணம் பறிக்கும் வேலையை காட்டிய சுசி, இந்த படத்தில் அட்வான்ஸ் டெக்னாலஜி மொபைலை கையில் எடுத்திருப்பது சூப்பர். அதிலும் அறிமுகம் இல்லாத நபர்கள் எப்படி ஒரு பெண்ணை மயக்க திட்டம் போடுகின்றார்கள், பேஸ்புக்கில் எப்படியெல்லாம் வேலை செய்கின்றார்கள் என்று காட்டிய விதம் பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுக்கலாம், ஒரு சிலர் உஷார் ஆகி திருந்த கூட செய்யலாம்.

நிகழ்காலத்தில் நம் வாழ்க்கையில் பயன்படுத்தும் டெக்னாலஜிகளின் ஆபத்தை காட்டியதற்காகவே பாராட்டலாம். அதே சமயத்தில் திருட்டு பயலே முதல் பாகத்தில் ஒரு எளிமை, யதார்த்தம் இருந்தது, அந்த விஷயத்தில் திருட்டு பயலே 2 கொஞ்சம் செயற்கை மிஞ்சி உள்ளது. படத்தின் முதல் பாதி பிரசன்னா அறிமுகம் வரை மெதுவாகவே நகர்கின்றது.

வித்யாசாகர் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார், அதிலும் பின்னணி இசையில் ஒலிக்கும் அந்த திருட்டு பயலே பாடல் ரசிக்க வைக்கின்றது, செல்லத்துரை ஒளிப்பதிவும் சிறப்பு.

ப்ளஸ்

இன்றைய தலைமுறைகள் சந்திக்கும் பிரச்சனையை அழகாக எல்லோருக்கும் புரியும் படி திரைக்கதை அமைத்து எடுத்தது.

பிரசன்னாவின் நடிப்பு, சைக்கோத்தனமாக அவர் செய்யும் வேலைகள், நிதானமாக பாபி சிம்ஹாவை டீல் செய்து அலையவிடும் இடம் என கலக்கியுள்ளார்.

பாபிசிம்ஹா, அமலா பால், பிரசன்னா மூவரும் ஒரு இடத்தில் சந்தித்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக நினைத்து நடிக்கும் காட்சி விசில் பறக்கின்றது.

மைனஸ்

முதல் பாதி திரைக்கதை கொஞ்சம் மெதுவாக செல்கின்றது.

கிளைமேக்ஸ் இன்னமும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.

மொத்தத்தில் அறிமுகம் இல்லாத நபர் யார் கொஞ்சம் உரிமை எடுத்து நம்மிடம் பேசினாலும் ஒரு நொடி திருட்டு பயலே-2 நினைவிற்கு வரும்.