திருவண்ணாமலை தீபத் திருவிழா: இந்தாண்டும் பக்தர்களுக்கு அனுமதியில்லை..

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழா வரும் 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதேபோன்று மலை ஏறுவதற்கும், கிரிவலம் செல்வதற்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட வீதிகளில் நடைபெறும் சுவாமி வீதி உலா, தேர் திருவிழா இந்த ஆண்டும் நடைபெறாது எனத் தெரிவித்துள்ள ஆட்சியர், அதற்கு மாற்றாக 5ஆம் பிரகாரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறும் எனக் கூறியுள்ளார்.