பரபரப்பான சூழ்நிலையில் திமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது..


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் இன்று நடைபெறும் என பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

கருணாநிதி மரணம் அடைந்ததால் திமுக தலைவர் பதவி காலியாக உள்ளது. திமுகவின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் திமுக பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து, பொதுச் செயலாளர் அன்பழகன், கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும்.

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது, கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்படலாம் என தெரிகிறது.