சுனாமி தாக்கிய 14-வது நினைவு தினம் : உயிரிழந்தோர் நினைவாக கடற்கரைகளில் அஞ்சலி..

தமிழகத்தை சுனாமி தாக்கி 14வது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், உயிரிழந்தோரின் நினைவாக அவர்களின் உறவினர்கள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004 இதே நாளில்தான், இந்தோனேஷியா சுமத்ரா தீவில் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது.

தாலாட்டுடன் கரையைத் தொட்டுச் சென்ற வங்கக் கடலின் அலைகள் அன்று திடீரென தனது ஆக்ரோஷத்தைக் காட்டின.

பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் மக்கள் சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானவர்களை வாரி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்றது.

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தில் தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

இதற்கு முன்னர் எந்தவொரு இயற்கை சீற்றமும் ஏற்படுத்திடாத பேரழிவை ஏற்படுத்தியது சுனாமி.

பல்லாயிரக்கணக்கான கடலோர மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அரசாங்கமும், பல்வேறு சர்வதேச அமைப்புகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வகையான நிவாரண உதவிகளை வழங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும்,

பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர், உடன் பிறந்தவர்களை இழந்த சகோதர, சகோதரிகள் என பலருக்கும் மனதளவில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்றளவும் மறையவில்லை.

சுனாமி தாக்கி 14 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும், தமிழகத்தின் கடலோரப் பகுதி மக்கள் இன்றளவும் மனதளவில் அதன் அச்சத்திலிருந்து விலகாதவர்களாகவே உள்ளனர்.

இந்நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் சுனாமி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலில் பால் ஊற்றி, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கடற்கரையில் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்