விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவன் இலங்கையில் உள்ளான் : கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை…

நடிகர் விஜய் சேதுபதி மகள் குறித்து பாலியல் ரீதியாக அவதூறு பரப்பியவன் இலங்கையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற டைட்டில் உடன் உருவாக இருந்தது. இத்திரைப்படத்தில் முரளிதரன் கேரக்டரில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

படம் குறித்த அறிவிப்பு அறிவிப்பு வெளியானதிலிருந்தே எதிர்ப்புகளும் எழத் தொடங்கின. தமிழகத்து மக்கள் போற்றும் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என அரசியல்வாதிகள், தமிழ்த்தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள்,

ரசிகர்கள் என பல தரப்பினரும் எதிர்ப்புக் குரல்களை பதிவு செய்தனர். எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து, 800 படம் எடுக்கும் முடிவு கைவிடப்பட்டது.

இந்த சர்ச்சையின் போது விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அவருடைய ட்விட்டர் பதிவுக்கு சமூகவலைதளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்தன. கனிமொழி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த ட்விட்டர் பதிவுக்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

சமூகவலைதளத்தில் அந்தப் பதிவை வெளியிட்டவரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். அதனையடுத்து, சென்னை காவல்துறை விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிரமாக பாலியல் மிரட்டவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில், காவல்துறை விசாரணையில், ஐபி முகவரி மூலம் இலங்கையில் அந்த நபர் இருப்பது தெரியவந்துள்ளது.

மத்தியஅரசு மூலம் இன்டர் போல் போலீசார் உதவியுடன் குற்றவாளியைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.

மத்திய அரசுக்கு இந்த வழக்கு மற்றும் குற்றவாளி குறித்து கடிதம் எழுதி , இருநாட்டு அரசின் உதவியுடன் குற்றவாளியை கைது செய்ய மத்திய குற்றபிரிவு போலீசார் முடிவுசெய்துள்ளனர்.