10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: தேர்வுத்துறை கடும் எச்சரிக்கை

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் பிழைகள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

10 ம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மே 9ம் தேதி வரை இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை தெரிவித்துள்ளதாவது:

மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பின், மாணவர்கள் சான்றிதழில் திருத்தம் கோரினால் பள்ளிகள், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

10-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், தலைப்பு எழுத்து, மீடியம், பயிற்று மொழி, புகைப்படம், பள்ளியின் பெயர் உள்ளிட்ட விவரங்களை மே 9-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் அனுப்ப வேண்டும்.

பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் , தொடர்ந்து திருத்தம் கோரி விண்ணப்பங்கள் வருவதால் தேர்வுத்துறை இறுதி வாய்ப்பு வழங்கி நடவடிக்கை.

மே 9-ம் தேதிக்குள் 10-ம் வகுப்பு மாணவர்களின் சுய விவர பெயர்ப்பட்டியலை சரிபார்த்து அனைத்து பள்ளிகளும் தங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் மே 9-ம் தேதி முற்பகலுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மே 10 முதல் 13 வரையிலான நாட்களில், தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் இருந்து பெறப்படும் பெயர்ப்பட்டியலை அரசுத்தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி பெயர்ப்பட்டியலை பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை உத்தரவு.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட பின், சான்றிதழில் திருத்தம் கோரினால் சம்மந்தப்பட்ட பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத்துறை எச்சரிக்கை

அரசுத்தேர்வுகள் இயக்ககத்தின் பணியாளருக்கான இணை இயக்குநர் அமுதவல்லி அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.