”அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவரிடம் ரூ.1,5 கோடியும், மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.75 லட்சம் வாங்கியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முத்துராமன் என்பவர் அரசின் லட்சினையை தவறாகப் பயன்படுத்தி குறு சிறு தொழில் மேம்பாட்டு கவுன்சில் என்ற போலியான அமைப்பை நடத்தி வந்துள்ளார். மேலும் இந்த அமைப்பில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறி ரூ.50 லட்சம் சேலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரை ஏமாற்றியுள்ளார். இந்த புகாரில் முத்துராமனை போலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில்தான் அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு முத்துராமன் ரூ.1.5 கோடி வழங்கியதாக வீடியோ வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர், “பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் கொள்ளையடித்து வருகிறார். குறு சிறு தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார். அண்ணாமலை ஏன் பாதயாத்திரையைப் பாதியில் நிறுத்தி விட்டு வெளிநாட்டுக்குச் செல்கிறார்? ” கேள்வி எழுப்பியுள்ளார்.