வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது. இதனால், தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
அதேபோல், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது.

தற்போது, உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மேலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை நகர், புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பதிவானது. சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 7 செ.மீ., விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 6 செ.மீ., மழை பதிவானது.

மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.