தமிழகத்தில் இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகவில்லை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி

 தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இன்னும் 1 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவை  தொகுதியில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை தொகுதி  மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் மே-19-ம் தேதி நடைபெற  உள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள்  தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தபால் ஓட்டு போடும் வசதி உள்ளது. துறை அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபாலில் வாக்களிக்க வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியிலும் தபால் ஓட்டை போடலாம் அல்லது எந்த வாக்குச்சாவடியில் பணியில் உள்ளாரோ அந்த பூத்திலும்  கடைசியாக வாக்களிக்கலாம். இப்படி ஓட்டு போட 3 விதமான வசதிகள் உள்ளன.

இந்த தேர்தலில் 1 லட்சம் போலீசார் தபால் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் 2 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு  வழங்கப்பட்ட தபால் ஓட்டுகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் ஓட்டுகள் தான் பதிவாகி உள்ளது.

இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் வர வேண்டும். ஆனால்  அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் இன்னும் ஓட்டு போடாமல் உள்ளனர்.

வாக்குச் சீட்டுகளை வாங்கி வைத்திருந்தாலும் அரசு ஊழியர்கள் இன்னும்  தபாலில் அனுப்பாமல் உள்ளனர்.

இவர்களுக்கு 23-ம் தேதி காலை 8 மணி வரை ஓட்டு போட கால அவகாசம் உள்ளது. ஆனால் இன்னும் ஓட்டு  போடாதது ஆர்வம் இல்லாததையே காட்டுகிறது.

உதவி தேர்தல் அதிகாரி விளக்கம்:

இதுகுறித்து விளக்கமளித்த தமிழக உதவி தேர்தல் அதிகாரி, தபால் ஓட்டுகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக துணை ஆட்சியர்  மேற்பார்வையில் தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தபால் ஓட்டுகளை தவறாமல் பதிவு செய்யுங்கள் என்று தேர்தல் கமி‌ஷன் வலியுறுத்தி வந்தாலும்  ஒவ்வொரு அரசு ஊழியர்களும் வாக்களித்தார்களா? என்பதை கண்டறிய தேவையான முயற்சி எடுக்காதது உண்மைதான். சில அரசு ஊழியர்களுக்கு  சொந்த ஊரில் ஓட்டு இருக்கும்.

பணிபுரியும் இடம் வேறொரு இடமாக இருக்கும். இவர்கள் ஓட்டு போட சொந்த மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று வர  வேண்டும் அல்லது அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வாக்களிக்க வேண்டும் என்றும் இதற்காக விடுப்பு எடுத்து செல்ல வேண்டுமா, என நினைத்து  சிலர் வாக்களிக்காமல் இருக்கலாம் என்றார்.

ஆனாலும் தினமும் ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்துக்கும் தினமும் தபால் ஓட்டு வந்து  கொண்டிருக்கிறது. 23-ம் தேதி தான் எவ்வளவு தபால் ஓட்டுகள் வந்துள்ளது. எத்தனை பேர் ஓட்டு போடவில்லை என்பது முழுமையாக தெரிய வரும்  என்று கூறினார்.