2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

இந்த மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை வெளியிட்டு உரையாற்றவுள்ளார்.

முதலீட்டாளர்களை வரவேற்கும் பொருட்டு பரதம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

வர்த்தக மையத்தில் 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகலிலும், நாளையும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.

மாநாட்டையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை மாலை நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இதனிடையே, செய்தியாளரிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், அனுபவத்தின் அடிப்படையில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்றார்.