பிறக்கிறது 2019: தலைவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

2019 ஆம் ஆண்டு பிறப்பதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

01.01.2019 அன்று புத்தாண்டு பிறப்பு என்பது, புத்துணர்வு தோன்றுவது, புதிய பயணம் தொடங்குவது. அது ஆங்கில ஆண்டு மாற்றம் என்பது மட்டுமல்ல; நமது ஆளுமையின் பரிணாம வளர்ச்சி மாற்றமாகவும் முன்னேற்றமாகவும் அமைய வேண்டும். அது தனிமனிதனுக்கு மட்டுமல்ல; தனிமனிதர்களின் தொகுப்பான ஒரு சமூகத்துக்கும், சமூகங்களின் கூட்டான நாட்டுக்கும் அது தான் இலக்கணம். தொடர்ந்து அத்தகைய வளர்ச்சியை நோக்கிய உதயக்கதிரொளி பாய்ச்சுவதாகப் புதிய ஆண்டு, எங்கும் இன்பம் தரும் எல்லோர்க்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும்; அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

அத்தகைய தன்னம்பிக்கையுடன் புத்தாண்டை புத்துணர்வுடன் எதிர்கொள்வோம். தமிழ் நாட்டவர்க்கும், உலகத்தமிழர்க்கும், அனைத்துக்கட்சித் தோழர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், அனைவர்க்கும் எனது அன்பான ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

வைகோ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

மனிதகுலம் வாழ்க்கையை முறைப்படுத்திக் கொள்ளத் திட்டமிடுவதற்காகவே கால ஓட்டம் கணிக்கப்படுவதால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குதான் விநாடிகள், நிமிடங்கள், மணி, நாள்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக ஆக்கி, அதற்கு முன்பும்-பின்பும் இரண்டாகப் பகுக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குப் பின் தற்போது இரண்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நாளில் 2019 இல், உலகம் அடி எடுத்து வைக்கின்றது.

‘இருளுக்குப் பின் ஒளி; வாட்டும் பனிக்குப் பின் வளம் தரும் வசந்தம்’ என்ற நியதியில் நம்பிக்கை கொள்வோம். கொல்கதாவில் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்திய இயேசுநாதர், கொடூரமான ரணங்களைச் சிலுவைப்பாடாகச் சுமந்தபோதிலும், அவர் பிறந்த நாளில் இருந்து எட்டாவது நாளையே கால ஓட்டத்தைத் தீர்மானிக்கும் ஆண்டின் முதல் நாளாக உலகம் ஏற்றுக்கொண்டு உள்ளது.

ஆஸ்திரேலியா, சூடான், கேமரூன், சமோவா, புருனோ, செக் குடியரசு, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகள், விடுதலை பெற்ற நாள் ஜனவரி 1 ஆகும். கருப்பர்களின் அடிமைத் தளைகளை நீக்கிட, ஆபிரகாம் லிங்கன் 156 ஆண்டுகளுக்கு முன், விடுதலைப் பிரகடனம் செய்ததும் இந்த நளில்தான்.
கடந்துபோன ஆண்டு தமிழ்நாட்டுக்குப் பேரவலத்தையும், டெல்டா மாவட்டங்களில் பெரும் அழிவையும், நாசத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.

மலர்கின்ற 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு அரசியலிலும், இந்தியத்துணைக்கண்ட அரசியலிலும் வியப்பூட்டும் மகிழ்ச்சியான மாற்றங்களை வழங்கப் போகின்றது.
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் குறிப்பாக நதிநீர்ப் பிரச்சினைகளில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத வஞ்சகத்தையும், துரோகத்தையும் செய்தது. இந்திய மக்கள் ஆட்சியின் அடித்தளத்தையே தகர்க்கும் விதத்தில், மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் வேலையில் ஈடுபட்டது. சர்வாதிகார பாசிச ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட, இந்துத்துவ சக்திகள் மதவெறியைத் திணித்து, இரத்தக் களறிகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

எனவே, நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியைப் படுதோல்வி அடையச் செய்யவும், இந்திய மக்கள் ஆட்சியைப் பாதுகாத்து, கூட்டு ஆட்சித் தத்துவத்தை நிலைநிறுத்துகின்ற வகையில், இணக்கமான மத்திய அரசு அமைவதற்கு தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாக்காளப் பெருமக்கள் இந்த நாளில் உறுதி ஏற்க வேண்டுகின்றேன்.

அதன் தொடர் விளைவாக, தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க தமிழக வாக்காளப் பெருமக்கள் கடமை ஆற்ற வேண்டும் என்று, தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழ் ஈழ விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஊழியனான நான் இருகரம் கூப்பி வேண்டியவாறு, ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.