திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி-28ம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த கலைஞர் கடந்த ஆகஸ்டு மதம் 7-ஆம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புயல், மழை காரணமாக அந்த தொகுதியில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான அறிவிக்கை வருகிற 3-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 10-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 11-ஆம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 14-ஆம் தேதி கடைசி நாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திருவாரூர் தொகுதியில் வருகிற 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி மாதம் 31 -ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆணையம் கூறியுள்ளது.