3 ஆண்டுகளில் 44 பேரைக் கொன்ற பசு பாதுகாப்பு குண்டர்கள்: அதிர்ச்சிகர தகவல்

மூன்றே ஆண்டுகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் 44 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த இந்த அமைப்பு, 2015 முதல் 2018 வரையிலான காலத்தில், பசுவின் பெயரால் நடந்த வன்முறைகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த 104 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “2015ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், பசுவின் பெயரால் நூற்றுக்கும் மேற்பட்ட வன்முறைகள் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் சுமார் 280 பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

மேலும், “இந்து அமைப்புகளைச் சேர்ந்த பசு குண்டர்கள் நடத்திய தாக்குதல்களால், கடந்த 3 ஆண்டுகளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, இந்துமதச் சிந்தனையை ஏற்றுக்கொண்ட கட்சி என்பதால், இந்து அமைப்புகள் இத்தகைய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசு குண்டர்களின் வன்முறைச் சம்பவங்களால் கடந்த 3 ஆண்டுகளில் உயிரிழந்த 44 பேர்களில், 36 பேர் முஸ்லிம்கள் என்ற புள்ளிவிவரத்தையும் ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பு வெளியிட்டுள்ளது.மத ரீதியான பதற்றத்தையும், கால்நடைகளைச் சார்ந்து இயங்கும் கிராமப்புறப் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பையும் இத்தகைய வன்முறைகள் ஏற்படுத்துவதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.