நடிகர் சங்க தேர்தலை வேறு இடத்தில் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

நடிகர் சங்க தேர்தலை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை வரும் 23 ஆம் தேதி அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் திட்டமிடப்பட்டது.

இதற்காக தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதாக கருத்து தெரிவித்தார்.

இதனிடையே, எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் பகுதிகளில் தேர்தல் நடத்த ஆட்சேபம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நந்தனம் ஒய்.எம்.சி.எ மைதானம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்ய நடிகர் சங்கத்திற்கு நீதிபதி அறுவுறித்தியுள்ளார்.

மாற்று இடத்தை தேர்வு செய்து நாளை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.