ஆயுஷ்மான் திட்டத்துக்கு மேற்கு வங்கம் நிதி ஒதுக்காது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பாக ஒதுக்கப்படும் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10 கோடி ஏழை குடுத்துக்கு ரூ. 5 லட்சம் வரையான மருத்துவ செலவை மத்திய அரசின் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 12,000 கோடி ஒதுக்கீடு செய்யும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்நிலையில் ஜார்க்கண்டின் ராஞ்சில் நடந்த பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி இத்திட்டத்தை துவங்கி வைத்தார்.

மத்திய அரசு, மாநில அரசுகளும் சேர்ந்து எல்லா ஏழைக் குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1000 – 1200 வரை காப்பீட்டுத் தொகை செலுத்தி, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த மருத்துவக் காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும், மீதி தொகை மாநில அரசும் ஏற்கும். இதனால் நாடு முழுதும் 10 கோடிக்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் மிக எளிதாக பயன்பெறுவார்கள்

இந்நிலையில், ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்பட வேண்டிய 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மம்தா கூறுகையில், ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பில் ஒதுக்கப்படும் 40 சதவீத நிதி ஒதுக்கமுடியாது. மாநிலத்தில் இத்திட்டத்தை தொடர மத்திய அரசு முழு நிதி அளிக்க வேண்டும்.’ என்றார்.