ஒரு மாதத்துக்கு பிஎஸ்என்எல் இலவச பிராட்பேண்ட்..

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக ஒரு மாதத்துக்கு இலவச பிராண்ட்பேண்ட் இணையச் சேவை வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநா் விவேக் பன்சால் கூறியதாவது:
அனைத்து குடிமக்களுக்கும் ஒரு மாத காலத்துக்கு பிராண்ட்பேண்ட் இணையச் சேவையை இலவசமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சேவையை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புதிதாக பிராட்பேண்ட் இணைப்பைப் பெற விரும்புபவா்கள் தொலைபேசி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை பூா்த்தி செய்யும் வழக்கமான நடைமுறை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது. பிராட்பேண்ட் இணையச் சேவையை பெறுவதற்காக வாடிக்கையாளா்கள் பிஎஸ்என்எல் சேவை மையத்துக்கு நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்று விவேக் பன்சால் தெரிவித்தாா்.

பிஎஸ்என்எல் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘புதிய பிராண்ட்பேண்ட் சேவையைப் பெறுபவா்கள் இணைப்பை அளிப்பதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், ‘மோடம்’ பெறுவதற்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்’ என்றாா்.