காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல்…

கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில், காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல்!!

காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்குமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

இருப்பினும் கா்நாடக அரசு தண்ணீா் திறந்துவிட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், கர்நாடகாவில் முதல்வர் எச்.டி.குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. – காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கே தற்போது காவிரி நீர்ப்படுகை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் கபினி, கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி அணைகளின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல் அளித்துள்ளார்.

எனவே, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காவிரி நீர் வாரிய உயர் மட்ட ஆலோசனை கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் நேற்று மாலை நடந்தது.

இக்கூட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மாண்டியா விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

இதே போல தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கூறுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். கூடிய விரைவில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.