காவிரிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்தும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு..

காவிரி நதிக்கு புத்துயிரூட்ட மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்திவரும் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார்.

இந்த இயக்கத்தில் மாநில அரசுகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரி முதல் சென்னை வரை மோட்டார் சைக்கிளில் சத்குரு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 3ம் தேதி தலைக்காவிரியில் புறப்பட்ட அவர், ஹன்சூர், மைசூர், மாண்டியா, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக இன்று சேலம் வந்தடைந்தார்.

மேச்சேரி அடுத்த பொட்டநேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சத்குருவிற்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்குரு, மேட்டூர் அணை நிரம்பி உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த 40 ஆண்டு காலத்தில் 44 முதல் 46 சதவீதம் வரை மழை பொழிவு குறைந்துள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.