மோடி அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது: சோனியா

மோடி அரசுக்கு கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக சோனியாகாந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ்அதிகாரம் மிக்க அமைப்பான செயற்குழுவை ராகுல் காந்தி அண்மையில் மாற்றியமைத்தார். அதன் முதல் கூட்டம் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சோனியாகாந்தி, மன்மோகன்சிங், குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய சோனியாகாந்தி கூறியதாவது:

2019 தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதற்கான ராகுலின் முயற்சிகளுக்கு நாம் அனைவரும் துணையாக இருப்போம். ஜனநாயக அமைப்பை அலட்சியப்படுத்தும் அபாயகரமான தற்போதைய ஆட்சியில் இருந்து நாட்டு மக்களை மீட்க வேண்டும். மோடி அரசுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய போது,

“தற்பெருமை பேசுவதாலும், பொய் வாக்குறுதிகளை அளிப்பதாலும் எதையும் சாதிக்க முடியாது. சமூக, பொருளாதார துறைகளில் நாட்டை மீட்டெடுக்க ராகுல் எடுக்கும் முயற்சிகளுக்கு நான் உட்பட அனைவரும் துணையாக இருப்போம்” என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 

நாட்டின் ஜனநாயக அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் மீது பாஜக அரசு தொடுக்கும் தாக்குதலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் குரல் எழுப்ப வேண்டும். காங்கிரசின் குரலே இந்திய மக்களின் குரல் என்றார். இந்தக் கூட்டத்தில், தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணியை முடிவு செய்யும் முழுமையான அதிகாரம் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டது. கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு தனியாக ஒரு குழு அமைக்கப்பட்டிருப்பதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி தெரிவித்தார்.

Count Down Starts To Modi Govt: Sonia