நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுந்த நிர்மலா தேவி..

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி விசாரணைக்கு ஆஜரான போது மயங்கி விழுவது போன்ற வீடியோ வெளியானது.

வழக்கு விசாரணைக்காக பேராசிரியர் நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் இன்று ஆஜராயினர்.

அப்போது விசாரணை தொடங்கும் நேரத்தில் திடீரென நிர்மலா தேவி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முகத்தில் தண்ணீர் தெளித்தும் , பெண் காவலர்கள் அவரது கைகளைத் தேய்த்து விட்டும் அவரை ஆசுவாசப்படுத்தினர்.

பின்னர் 3 பேரும் வரும் 23 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நிர்மலா தேவி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.