அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்..


மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் எதிர்ப்பு இன்றி நிறைவேறியது.

மாநில அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டம் ஒன்றை அறிவித்தது. அதற்கான மசோதாவுக்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்மொழிந்தார். அவர் பேசும்போது, மாநில அரசின் உரிமைகள் இந்த சட்டம் மூலம் பறிக்கப்படுவதாகவும், இந்த மசோதாவை சட்டமாக்குவதை உடனே மத்திய அரசு நிறுத்த வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், அனைத்து மாநிலங்களுடனும் மத்திய அரசு கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னர் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இந்த தீர்மானம் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.