சத்துணவில் முட்டை நீக்கமா? : கி. வீரமணி கண்டனம்..


மதிய உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வாரத்திற்கு 3 முறை முட்டை வழங்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற செய்தி அதிர்ச்சியூட்டக் கூடியதாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,
மாணவர்களுக்கு உண்மையான சத்து தரும் சமச்சீர் உணவு என்பதனால் பெரிதும் உதவக் கூடியது முட்டை உணவு.
அப்பழக்கம் இல்லாத மாணவர்களுக்கு வாழைப்பழம் தரவும் – 1989இல் முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அறிமுகப்படுத்தினார். 1989 முதல் இத்தனை ஆண்டுகள் இவை தொடர்ந்து வந்தன.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும்கூட இதனை மாற்ற முயற்சிக்கவில்லை.
இப்போது ஏன் இந்த வீண் வேலை?
கிண்டி ராஜ்பவனில் – ஆளுநர் மாளிகையில் காய்கறி தவிர மாமிச உணவு வகைகள் எதுவும் இனி பரிமாறப்படாது என்று ஏற்பட்டதன் தொடர்ச்சியா? பா.ஜ.க.வின் திட்டமா இது? மறைமுக பா.ஜ.க. கொள்கைத் திணிப்பு அதிமுக அரசு மூலமே நடத்தப்படுகிறதா?
தமிழ்நாடு அரசின் இந்த முடிவைக் கண்டிக்கிறோம். பழைய ஏற்பாடே தொடர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.