“எண்ணும் எழுத்தும் திட்டம்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
வரும் 2025-ம் ஆண்டுக்குள் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணிதச் செயல் பாடுகளை செய்யும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.
கல்வியில் இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் பயனாக அறிவியல் மனப்பான்மை மற்றும் சமூக திறன்களுடன் இணைந்த மொழி கற்பித்தலில் மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாக கொண்டு ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் இலக்காகும். இதன்படி தமிழகத்தில் உள்ள ஒன்று முதல் மூன்றாம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்கள் சூழ்நிலையியல் பாட கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.
இதன் காரணமாக 2025-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிப்பார்கள். அடிப்படை கணித செயல்பாடுகளை மேற் கொள்வார்கள்.

திருவள்ளூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தினை கவனித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு 2022-2023-ம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சியும் நடைபெற்றது. இதை தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகளும் நடைபெற்றது. இதற்காக 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அதே நாளில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இதற்கான நிகழ்ச்சி சென்னையை அடுத்த புழல் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காலையில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைப்பேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், மாணவர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, ஆவடி சா.மு.நாசர், மாதவரம் எம்.எல்.ஏ. சுதர்சனம், கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணும் எழுத்தும் மாதிரி வகுப்புகளையும் அங்கு பார்வையிட்டார்.