குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜனவரி 4-ம் தேதி முதல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி இன்று தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆங்காங்கே அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார். பின்னர் எடப்பாடியில் உள்ள பல இடங்களுக்கு மினி வேனில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இருப்பாளி என்ற இடத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதுதவிர ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்தார். பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும். துண்டுக் கரும்புக்குப் பதில் முழுக் கரும்பு வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். இதைப் பொதுமக்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.