நான் தான்… ஸ்மார்ட் போன் பேசுகிறேன்…: கி.கோபிநாத் (சுதந்திரதினக் கவிதை)

 

               

கி. கோபிநாத்

அன்று கிழக்கிந்திய கம்பெனி…

ஆபத்பாந்தவர்களாக காந்தி, போஸ்.

இன்று சாம்சங், நோக்கியா, ஆப்பிள்

வோடஃபோன், ஏர்டெல், ஐடியா…

காப்பாற்ற யாருமின்றி அனாதையாய் நீங்கள்

காந்தியும், போஸும் இருந்திருந்தால்

அவர்களும் இன்று என் அடிமைகளே!

 

நான் தவத்திற்கான ஒரு கருவி… ஆம்

வசியப்படுத்துவதில் என்னை மிஞ்ச யார்?

வாஞ்சையாக எனைத் தடவவே உங்கள் விரல்

ஆமாம், செருக்குதான் எனக்கு

என்ன செய்ய முடியும் உங்களால்?

கருவறை நீங்கலாக மனித இனம்

செய்ய வேண்டியதை தீர்மானிப்பவன் நானே

 

உங்கள் மனக்குரங்கு என் கையில்

என் விருப்பப்படிதான் ஆட வேண்டும்

எனைத் தவிர்த்துவிட்டு குடும்பத்தோடு குதூகலமா?

பெற்றோரிடமிருந்து பிள்ளைகளை பிரிப்பேன்

சகோதரர், இன்னபிற உறவுகளையும் பிரிப்பேன்

குடும்ப மகிழ்ச்சியை வேறோடு குலைப்பேன்

என்ன செய்ய முடியும் உங்களால்?

 

முடிந்தால் விலக்கி வைத்துப் பாருங்களேன்

சில மணி நேரத்தில் மீண்டும் என் காலடியில்

அடிமைகளாய் கிடப்பீர் நீங்கள்… இது சவால்… ரெடியா?