கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் விரைவில் வீடு திரும்புகிறார்..


காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி விரைவில்வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில நாட்களாக மருத்துவ கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிய தலைவர்கள் பலரும் மருத்துவமனைக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், குடியரசுத் துணை தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், மலேசியா சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலர், தமிழ் திரையுலக நடிகர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல்நலம் குறித்து கேட்றிந்தனர்.

நேற்று முன்தினம் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவகவுடா வருகை தந்தார்.

இதையடுத்து நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியார் விசாரித்தனர்.

இந்நிலையில் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. படுக்கையில் இருந்து எழுந்து அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்தார். தொடர்ந்து அவரது உடல்நிலை சீரடைந்து வருவதால் அவரை விரைவில் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், தற்போது கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல் நிலை முன்னேறி வருகிறது. மருத்துவமனையில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார்.