சிங்கப்பூரில் இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே..

இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே சிங்கப்பூரை வந்தடைந்துள்ளார். அவர் பயணம் செய்த சவூதி விமானம் 7.17 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர் அதிபர் பதவியிலிருந்து விலகியிருப்பதாக நம்பப்படுகிறது.
அவர் சிங்கப்பூரில் எத்தனை நாள்கள் தங்குவார் என்பது தெளிவாக தெரியவில்லை. சிங்கப்பூரிலிருந்து அவர் எந்த நாட்டுக்கு செல்வார் என்ற விவரமும் தற்போது கிடையாது.

திரு ராஜபக்சே சிங்கப்பூரில் தஞ்சம் கோரவில்லை என்றும், அவருக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அடைக்கலம் தரவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு அறிவித்தது. சிங்கப்பூர் பொதுவாக தஞ்சம் அளிப்பதில்லை என்று அது கூறியது. அவர் தனிப்பட்ட முறையில் இங்கு வந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.

சிங்கப்பூரர்கள், நிரந்தர வாசிகள், வேலை அனுமதிச் சீட்டு உள்ளவர்கள், பயணிகள் போன்ற அனைத்து தரப்பினரும் சிங்கப்பூர் சட்டங்களை மதித்து நடக்குமாறு சிங்கப்பூர்க் காவல் துறை கேட்டுகொண்டது. சட்டவிரோதமான பொது கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அது நினைப்படுத்தியது.

இந்நிலையில் திரு ராஜபக்சேவை சந்திப்பதற்காக விமான நிலையத்துக்கு சென்றவர்களில் ஒருவர் 38 வயதான அருளம்பலம் ரமஸ்தனன். இலங்கையில் பிறந்த அவர் 2009ல் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றார். இலங்கையில் உள்ள தனது குடும்பம் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வருவதாகக் கூறிய அவர், திரு ராஜபக்சேவை பார்த்தால் இதை கூற விரும்புவதாகக் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் குறிப்பிட்டார்.