இலங்கையில் கலவரம் : 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்..


இலங்கையில் இன்று முதல் 10 நாள்களுக்கு அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகக் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகவும் வன்முறை மேலும் பரவாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வன்முறை ஏற்பட்டிருப்பதையடுத்து 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

கட்டாய மதமாற்றம் செய்வதாக கடந்த மாதம் 27ம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

இதனிடையே இந்த மோதலில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், இன்று காலை கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வன்முறை கட்டுப்படாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது.

இதன் காரணமாக அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திஷ்யநாயக தெரிவித்தார்.

மேலும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்கள் மூலம் கலவரத்தை தூண்டும் வகையில், சட்டவிரோத பிரசாரம் நடப்பதை கட்டுப்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.