ஊடக சுதந்திரமும், 124 சட்டப்பிரிவும் : நக்கீரன் கோபால் வழக்கில் ஊடகத்துறை சார்பாக வாதாடிய ’இந்து’ ராம்..

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சட்டப்பிரிவு 124க்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தமில்லை எனவும், ஆளுநரின் பணிக்கு தடை செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என ‘இந்து’ ராம் முன்வைத்துள்ள கருத்துக்கள் பிரதிநித்துவம் அடைந்துள்ளன

ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலை, தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் அவரிடம் அங்கு விசாரணை நடைபெற்றது.

கடந்த ஏப்ரலில் 20-22, 208 தேதியிட்ட நக்கீரன் இதழின் அட்டைப்படத்தில் ஆளுநரிடன் புகைப்படத்துடன் ”பூனைக்கு மணி கட்டிய நக்கீரன்! பொறியில் சிக்கிய கவர்னர்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதனடிப்படையில் ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டை அளித்த புகாரின் பேரில் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து சென்னை சிந்தாரிப்பேட்டை ஜாம் பஜார் காவல் நிலையத்துக்கு ‘நக்கீரன்’ கோபால் அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்திய தண்டனைச் சட்டம் 124 குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பணிகளை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அது தொடர்பான விசாரணை மாலை 3 மணியளவில் தொடங்கியது.

‘நக்கீரன்’ கோபால், அவரது தரப்பு வழக்கறிஞருடன் ஊடக பிரதிநிதி என்ற முறையில் இந்து பத்திரிக்கை ஆசிரியர் என். ராமும் வழக்கில் ஆஜரானார்.

வழக்கு விவாதத்தின் போது பேசிய அவர், நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 124ம் சட்டப்பிரிவிற்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமுமில்லை,

]ஆளுநரின் பணிக்கு தடை செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால் கருத்து சுதந்திரத்தில் பெரும் ஆபத்து ஏற்படும் என்று என். ராம் நீதிபதியிடம் தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ’நக்கீரன்’ கோபாலுக்கு நீதிமன்ற காவல் வழங்க முடியாது என்று பரபரப்பு உத்தரவை பிறிப்பித்தது.

மேலும், இந்த விவகாரத்தில் நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ’இந்து’ என்.ராம், ஊடகதுறையின் பிரதிநிதியாக நீதிமன்றம் சென்றேன். ஆளுநர் பதவிக்கு இடையூறு செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால் நாடு முழுவதும் 124 பிரிவின் கீழ் வழக்குகள் அதிகரிக்கலாம்.

124 பிரிவின் வழக்கை அனுமதித்தால் தவறான முன்னுதராணமாகி விடும் என்று நீதிபதியிடம் தெரிவித்தேன். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிக்கு நன்றிகள் என்று அவர் தெரிவித்தார்.