மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: திருப்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும்,
சென்டிரல் முதல் பரங்கிமலை இடையேயான 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடைபெற்று வந்தன.
மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தில், ஏற்கனவே 35 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, சென்டிரலில் இருந்து விமானநிலையம் வரையிலும், விமானநிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலும் ஏற்கனவே ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
விமானநிலையம்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் டி.எம்.எஸ்.சில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மீதம் உள்ள வழித்தடத்தில் சுரங்கப்பாதை,
ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது.
இதன் மூலம் சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முழுமை அடைந்து உள்ளன.
இதில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல் 2-ம் அடுக்கு, ஐகோர்ட்டு, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய 7 ரெயில் நிலையங்கள் உள்ளன.
மொத்தத்தில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் 19 ஏ.சி. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்கள், 13 உயர்த்தப்பட்ட ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் உள்ளன.
பயணிகள் பாதுகாப்புக்காக பிளாட்பாரம் மேடை திரைக் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் முழுமை அடைந்து உள்ளது.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஆந்திராவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்படரில் திருப்பூர் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து பணிகள் நிறைவடைந்த டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையேயான பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்தை
பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து  காணொலி காட்சி மூலம் வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தையும்,
மெட்ரோ ரெயில் நிலையங்களையும் தொடங்கி வைத்தார். திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி நினைவுப்பரிசு வழங்கினார்.
மேலும் சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும்,
எண்ணூர் கடற்கரையில் உள்ள (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்) பி.பி.சி.எல். முனையத்தையும்,
சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (சி.பி.சி.எல்.) குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அத்துடன் திருப்பூரில் புதிதாக கட்டப்பட இருக்கும் 100 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கும்,
சென்னை விமானநிலையத்தை மேம்படுத்தி நவீனப்படுத்தும் திட்டத்துக்கும், திருச்சி விமானநிலையத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் ஒருங்கிணைந்த கட்டிடத்துக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்,
சபாநாயகர் பி.தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க் கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.