சதத்தை நோக்கி பெட்ரோல் விலை விர்…: எங்கள் கையில் ஒன்றுமில்லை என்கிறது மத்திய அரசு

பெட்ரோல் விலை விரைவில் சதம் போடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், நாங்கள் செய்ய ஒன்றும் இல்லை என கைவிரிக்கிறது மத்திய அரசு. 

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படியே போனால், சில வாரங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ.100 ஐத் தொட்டுவிடும். அது மட்டுமின்றி, ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தச் சொல்லி அமெரிக்கா கெடுவிதித்திருக்கிறது.ஒரு வேளை ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்தவதையும் இந்தியா நிறுத்திவிட்டால். கற்பனைக்கு எட்டாத பொருளாதார விளைவுகள் ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது.

இந்நிலையில், எரிபொருள் விலையை குறைக்காததால், மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திய ரூபாயின் மதிப்பு மற்ற வெளிநாட்டு கரன்சியை விட தற்போது வலிமையாகவே இருப்பதாக கூறினார். ஆனால் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், கச்சா எண்ணெயை  டாலர் மூலமாகவே வாங்க வேண்டியிருப்பதே நமக்கு பிரச்சினையை உருவாக்குவதாக கூறினார்.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான “ஒபெக்”, ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக்டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதாக உறுதி அளித்திருந்ததை குறிப்பிட்டார். ஆனால் அந்த இலக்கு எட்டப்படவில்லை என்பதுடன், ஈரான் விவகாரம், வெனிசுலா மற்றும் துருக்கியில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற சர்வதேச காரணிகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். இவைகளை எல்லாம் சரி செய்வது இந்தியாவின் கைகளில் இல்லை என்பதால், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்தியாவின் எதிர்காலம் இந்த நிலையில்தான் இருக்கிறது மக்களே… 2014ல் மோடி… மோடி என்று கூக்குரலிட்டு கும்மியடித்த கூட்டமே இந்த விளைவுகளுக்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது?

  • புவனன்

No way to control the petrol price – Centre