பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் முக்கியதுவம் வழங்கவில்லை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேசிய ஊடகங்கள் வழங்கவில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த சம்பாசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர், மத்திய அரசு கஜா புயல் பாதிப்பிற்கு வழங்கிய நிவாரணத்தில், மாநிலத்திற்கு, மாநிலம் வேறுபாடுகள் உள்ளதாக தெரிவித்தனர்.

நகர்புற பாதிப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், அழுத்தமும் ஊரக பகுதிகளுக்கு கொடுக்கப்படவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தேசிய ஊடகங்கள் ஊரக பகுதிகளை புறக்கணிப்பதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்ததோடு, டெல்லியில் நிர்பயாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்,

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.

தொடர்ந்து, கஜா புயலால் கேராளாவில் எத்தனை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன? எவ்வளவு நிவாரணம் வழங்கப்பட்டது? என்றும்

அதே போன்று தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கை 3 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.