கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை: அமெரிக்க அதிபர் டிரம்ப்..


கைதிகளை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் கொடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

வட கொரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களான கிம் சாங்-டக், கிம் ஹாக்-சாங், கிம் டாங்-சுல் ஆகிய மூவரும் புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர். டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகிய இருவரும் வரும் ஜூன் 12 ஆம் தேதி, நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள நிலையில், நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை வடகொரியா விடுவித்தாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வடகொரிய நாட்டுத் தலைநகர் பியாங்கியாங்கில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கைதிகள் மூவரும் விடுவிக்கப்பட்டு இருந்தனர். வாஷிங்டன் நகரின் புறநகர் பகுதியான ஆண்ட்ரூஸ் கூட்டு விமான படைதளத்துக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அந்த 3 கைதிகளையும், அதிபர் டிரம்ப்பும், அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் நேரில் சென்று வரவேற்றனர்.அப்போது பேசிய டிரம்ப், 3 கைதிகளையும் விடுவித்தமைக்காக கிம் ஜோங்-உன்னுக்கு நன்றி கூறினார்.

இந்த நிலையில், இண்டியானா மாகாணத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர், தனது செயல் மூலம் தனது நாட்டிற்கு மிகப்பெரிய சேவையை செய்துள்ளார். வடகொரியாவால் பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் மிகவும் கண்ணியத்தோடு வந்துள்ளனர். இவர்களை விடுவிக்க வடகொரியாவுக்கு பணம் எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால், ஒபாமா அரசு 1.8 பில்லியன் டாலர் தொகையை ஈரானுக்கு கொடுத்து 5 அமெரிக்க கைதிகளை விடுவித்தது” என்று குற்றம் சாட்டினார்.