ருஷ்யப்புரட்சியை அடையாளம் கண்டு வரவேற்ற பாரதி: அ.மார்க்ஸ்

செப்டம்பர் 11 : மகாகவி பாரதி நினைவாக
“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””a.marx 30.7
பாரதி தமிழ்க் கவிதை வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்பதை பேரா.சிவத்தம்பியும் நானும் இணைந்து எழுதிய ‘பாரதி – மறைவு முதல் மகாகவிவரை’ எனும் முழு நூலில் விரிவாக எழுதியுள்ளோம்.

 

பாரதி கவிதைப் போக்கை மாற்றியவர் மட்டுமல்ல. நவீன தமிழை உருவாக்கியவர்; தமிழில் நவீன சிந்தனைகளைக் கொணர்ந்தவர். இதழியலிற்கு முக்கிய பங்களிப்புகளைச் செய்தவர் என அவருக்குப் பல பரிமாணங்கள் உண்டு. அவரது உரைநடை மிக அற்புதமானது.

 

உலகமே வியந்தும், பயந்தும், வெறுத்தும் நோக்கிய ருஷ்யப் புரட்சியை அடையாளம் கண்டு வரவேற்று அவர் இசைத்ததை எப்படி ஒருவர் மறந்துவிட இயலும்?

 

ரஷ்யப் புரட்சியை வியந்து பாராட்டியது மட்டுமல்ல. லெனின் தலைமையிலான ஆட்சியின் போக்குகளையும் அவர் கூர்ந்து கவனித்துக் ஒண்டிருந்தார். ருஷ்யாவில் பெண்களை எல்லாம் பொதுவுடைமை ஆக்கப் போகிறார்கள் என மேலைத் தேயப் பத்திரிகைகள் பல அவதூறுகள் செய்தபோது மகாகவி பாரதி மான்செஸ்டர் கார்டியன் பத்திரிகையை மேற்கோள் காட்டி லெனின் காலத்திய ருஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள திருமணம் தொடர்பான விதிகள் எப்படி ஐரோப்பாவிலேயே முற்போக்கானவையாக உள்ளன, சநாதன இந்தியாவில் பெண்கள் நடத்தப்படும் நிலையிலிருந்தும் உயர்ந்துள்ளன என எழுதியுள்ள இக்கட்டுரை இணை சொல்ல இயலாத ஒன்று.

 

மிக்க மன நெகிழ்வுடன் மகாகவியின் இக்கட்டுரையை இங்கு பதிவிடுகிறேன்..

 
நவீன ருஷ்யாவில் விவாக விதிகள் – பாரதி

bharathi2
ருஷ்யாவில் ஜார் சக்ரவர்த்தியின் ஆட்சி பெரும்பாலும் ஸமத்வக் கக்ஷியார் அதாவது போல்ஷிவிஸ்ட் கக்ஷியாரின் பலத்தாலே அழிக்கப்பட்டது. எனினும் ஜார் வீழ்ச்சியடைந்த மாத்திரத்திலே அதிகாரம் போல்ஷிவிஸ்ட்களின் கைக்கு வந்துவிடவில்லை. அப்பால் சிறிது காலம், முதலாளிக் கூட்டத்தார் கெரன்ஸ்கி என்பவரைத் தலைவராக நிறுத்தி, ஒருவிதமான குடியரசு நடத்தத் தொடங்கினார்கள். ஆனால் கெரன்ஸ்கியின் ஆட்சி அங்கு நீடித்து நடக்க வில்லை. இங்கிலாந்து, ப்ரான்ஸ் முதலிய நேச ராஜ்யங்களிடமிருந்து பலவகைகளில் உதவி பெற்ற போதிலும் புதிய கிளர்ச்சிகளின் வெள்ளத்தினிடையே,கெரன்ஸ்கியால் தலைதூக்கி நிற்க முடியவில்லை. சில மாதங்களுக்குள்ளே கெரன்ஸ்கி தன் உயிரைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டாக ருஷ்யாவினின்றும் ஓடிப்போய், நேசவல்லரசுகளின் நாடுகளில் தஞ்சமென்று குடிபுக நேரிட்டது.

போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலேஅதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவர்களிலே சிலர் அதன் மீது ராஜரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கக்ஷியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியை பலர் அனுபவிக்கிறார்களென்று அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால், ‘கெட்டிக்காரன்புளுகு எட்டு நாளைக்கு’ ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்யத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்கமுடியும்? சில தினங்களுக்கு முன்பு, இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரம் செய்யப்படும் ‘மாஞ்செஸ்டர் கார்டியன்’ என்ற பத்திரிகை நவீன ருஷியாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விவரங்களைப் பிரசுரம் செய்திருக்கிறது.

 

அவற்றைப் பார்க்கும்போது, நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான உயர்ந்த பக்குவ நிலையை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கிற தென்று தெளிவாக விளங்குகிறது ஆண், பெண் இருபாலாரும் பரிபூரண ஸமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இருபாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்கவேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரீகத்தின்உண்மையான நோக்கம். பெண்களுக்கு விடுதலை தாங்கள் வேறு பல ஜாதியார்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றா மென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையிலே பார்த்தால், ஐரோப்பாவின் இதரப் பகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷியா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ள தென்பது பரத்யக்ஷமாகத் தெரிகிறது.

 

”மாஞ்செஸ்டர் கார்டியன்” சொல்லுகிறது:- ”தெற்கு ஸோவியட் (போல்ஷிவிஸ்ட்) ருஷியாவில் இதுவரையிலிருந்த வீண் நிர்ப்பந்தங்கள் இனி விவாக விஷயத்தில் இல்லாதபடி ஒழித்து விடப்படும். அதாவது, வேற்றுமைகள் முதலியன விவாகங்களுக்குத் தடையாகக் கணிக்கப் படமாட்டா! இப்போதுள்ள சட்டப்படி ஸ்திரீகளுக்கும் புருஷர்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவர். எல்லாக் குழந்தைகளும் ஸமூஹச் சட்டப்படி பரிபூரண சமத்வம் உடையனவாம். பாதுகாப்பில்லாத குழந்தைகள் யாருக்குப் பிறந்த போதிலும், அவற்றைப் பாதுகாக்க ஒரு தனி இலாகா ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் ராஜாங்க சாஸனப்படி நடைபெறும் விவாகங்களையேஅங்கீகாரம் செய்யும். பெண்கள் பதினாலு வயதுக்குள்ளும், ஆண்கள் பதினெட்டு வயதுக்குள்ளும் விவாகம் செய்து கொள்ள வேண்டும். இரு திறத்தாரும் மனமொத்தால்தான் விவாகம் செய்யலாம். விவாகம் முடிந்ததும் புருஷன் அல்லதுஸ்திரீயின் பெயரைக் குடும்பத்தின் பெயராக வைத்துக் கொள்ளலாம். விவாகத்துக்குப் பிறகு தம்பதிகள் பரஸ்பரம் உதவியாக வாழக் கடமைப் பட்டிருக்கிறார்கள். புருஷனேனும் ஸ்திரீயேனும் விவாக பந்தத்தை நீக்கிக்கொள்ள விரும்பினால், அங்ஙனமே நீக்கிக் கொள்ளச் சட்டம் இடங்கொடுக்கிறது.’

 

மேற்படி விவரங்கள் ‘மான்செஸ்டர் கார்டியன்’ பத்திரிகையிலே காணப்படுகின்றன. சில தினங்களின் முன்பு ஒரு கிராமாந்தரத்து ஸ்திரீ ‘மாதர் நிலை’ என்ற மகுடத்தின் கீழே ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் ஒரு வியாஸம் எழுதியிருந்தார். அந்த வியாஸத்தை வாசித்துப் பார்த்தால் (ஸ்ரீ மான்காந்தி சொல்லுவது போல) எவனுக்கும் அழுகை வராமல் இராது. அந்த வ்யாஸத்தில் நம்முடைய தேசத்து ஸ்திரீகளை நம்மவரில் ஆண்மக்கள் எத்தனை இழிவாகவும் குரூரமாகவும் நடத்துகிறார்களென்பதை அந்த ஸ்திரீ மிகவும் நன்றாக எடுத்து விளக்கியிருந்தார். உலகத்தில் ஒரு ஸ்திரீ ஜனன மெய்திய மாத்திரத்திலே பூமாதேவி மூன்றே சொச்சம் முழம் கீழே அமிழ்ந்து போய் விடுவதாக இந்நாட்டில் முந்தைய ஆண்மக்கள் எழுதி வைத்திருப்பதையும் அதுபோல் ஸ்திரீகளை இழிவாகவும் குறைவாகவும் சொல்லும் வேறு பல ‘சாத்திர’ வசனங்களையும் மேற்கோள் காட்டி, அந்த மாது நம் பெண்மக்களின் ஸ்திதி, விலங்குகளின் ஸ்திதியைக் காட்டிலும் பரிதாபத்துக்கு இடமாக விளக்கி மிகவும் வருத்த முணர்த்தியிருந்தார்.

 

இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரீகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரீகளின் விஷயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்த சக்தியினாலே கீழே வீழ்த்திற்று என்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை. திருஷ்டாந்தமாக, நாம் குழந்தைகளை குடும்ப சம்ரக்ஷணையினின்றும் பிரித்து ராஜாங்க ஸம்ரக்ஷணையில் விடவேண்டியதில்லை. பெண்கள் 14வயதுக்குள்ளும் ஆண்கள் 18 வயதுக்குள்ளும் விவாகம்பண்ணித் தீர வேண்டுமென்று நிர்பந்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. விவாகத்தை ரத்து செய்யும் விஷயத்தில் அவஸரப்பட வேண்டியதில்லை. பொறுமையைஉபயோகப்படுத்தி விவாகக் கட்டை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரீகத்தின் சிறப்பாதலால் நாம் அதற்குரிய ஏற்பாடுசெய்வோம். ஆனால் ‘ஆண்களுக்கும் பெண்களுக்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலோரும் ஸமானமாகவே கருதப்படுவார்கள்’ என்று ருஷ்யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுஸரித்தல் மிக, மிக, மிக, மிக அவசரம்.

 

 

 

– பேராசிரியர் அ.மார்க்சின் முகநூல் பதிவில் இருந்து…. நன்றியுடன்…

_________________________________________________________________________