ராஜேஷ்குமார் நாவலை விட கோடநாடு விவகாரத்தில் மர்மங்கள் நிறைந்துள்ளன:சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை …

தமிழக சட்டப்பேரவை, 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 10 மணிக்கு மீண்டும் தொடங்கியது. துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. முதல் நாளில் நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை; 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தாமதத்தால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டதாக புகார் கூறினார். காங்கிரஸ் உறுப்பினர் புகாரை மறுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 100 நாட்களுக்கு முன் ஆட்சியில் இருந்த அதிமுக முறையாக நீர் வழித்தடங்களை சரி செய்திருந்தால் நீர் தேங்கியிருக்காது என செல்வப்பெருந்தகை கூறினார்.

நேற்று 2 மணி நேரம் மழை பெய்ததால் சென்னை தத்தளித்ததாக பழனிசாமி பேசியதற்கு உறுப்பினர் நந்தக்குமார் பதிலளித்தார். 2015-ல் 4 நாட்கள் அதிகாரிகள் காத்திருந்தும் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க அனுமதி கிடைக்கவில்லை. 4 நாட்களுக்கு பின் உபரிநீரை திறந்துவிட்டதால் சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மூழ்கியது என செல்வப்பெருந்தகை குற்றம் சாடினார். இதற்கு பதிலளித்த பழனிசாமி; செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழ் உள்ள 100 ஏரிகளில் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் சென்னையில் பெருவெள்ளம் என தெரிவித்தார். சிஏஜி அறிக்கையை சுட்டிக்காட்டி பழனிசாமி பேசியதற்கு நிதியமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.