ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு : சீமான் மீது வழக்கு பதிவு..

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சீமான்,

ராஜீவ்காந்தி கொலையை குறிப்பிட்டுப் பேசினார். ராஜீவ்காந்தியை தாங்கள்தான் கொன்றோம் என்பது சரிதான் என்றும்,

அமைதிப் படையை அனுப்பி தமிழர்களை கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி தமிழர்களின் தாய் நிலத்தில் கொன்று புதைக்கப்பட்டார் என வரலாறு ஒருநாள் திருத்தி எழுதப்படும் என்றும் சீமான் கூறினார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்களை அவதூறாக பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசத்திற்கு விரோதமாக பேசிய சீமான் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.