இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளராக கணவன்,சிவகங்கை மாவட்ட ஆட்சியாளராக மனைவி அசத்தும் ஐஏஎஸ் தம்பதி….

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளராக கணவன்,சிவகங்கை மாவட்ட ஆட்சியாளராக மனைவி அசத்தும் ஐஏஎஸ் தம்பதி

தமிழ்நாடு அரசு 16-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடைமாற்றம் செய்துள்ளது. அதில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கணவரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மனைவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவராக விஷ்ணு சந்திரனும் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக ஆஷா அஜித் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணைச் செயலர் ஜெ.ஆனி மேரி ஸ்வர்ணா, அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிக வரித் துறை இணை ஆணையர் (நுண்ணறிவு) ஐ.எஸ்.மெர்சி ரம்யா, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ்.உமா, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நில அளவை மற்றும் நில ஆவணங்கள் துறை கூடுதல் இயக்குநர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஃபைபர்நெட் கழக மேலாண்மை இயக்குநர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், வணிக வரித் துறை இணை ஆணையர் (நிர்வாகம்) எம்.எஸ்.சங்கீதா, மதுரை மாவட்ட ஆட்சியராகவும், வழிகாட்டிப் பிரிவு செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் பி.விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாநகராட்சி ஆணையர் டி.கிறிஸ்துராஜ், திருப்பூர் மாவட்ட ஆட்சியராகவும், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் ராஜகோபால் சுங்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் சோகோசர்வ் மேலாண்மை இயக்குநர் எம்.என்.பூங்கொடி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இணை மேலாண்மை இயக்குநர் கே.எம்.சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை செயல் அதிகாரியாகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எஸ்.விசாகன், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர, மேலும் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.