“ராமர் எங்கள் கடவுள் நேபாளத்தில் தான் அயோத்தி” உள்ளது : நேபாள் பிரதமர் ஓலி பேச்சு..

உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் கடவுள் ஒரு நேபாளி: நேபாள் பிரதமரின் சர்ச்சைப் பேச்சு பல விவாதங்களை எழுப்பியுள்ளது.

உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது, கடவுள் ராமர் ஒரு நேபாளி என்று நேபாள் பிரதமர் சர்மா ஒலி சர்ச்சையைக் கிளப்பும் விதமாகப் பேசியுள்ளார்.

தெற்கு நேபாளில் தோரியில்தான் ராமர் பிறந்தார் என்கிறார் சர்மா ஒலி.

நேபாளக் கவிஞர் பானுபக்தாவின் பிறந்த தின கொண்டாட்டத்தின் போது நேபாளப் பிரதமர் சர்மா ஒலி, “நேபாளம் பண்பாட்டு ஆக்ரமிப்பில் சிக்கியுள்ளது, இதன் வரலாறு திரிக்கப்படுகிறது” என்றார்.

கவி பானுபக்தா 1814-ல் பிறந்தவர். ராமாயணத்தை நேபாளி மொழியில் ஆக்கம் செய்தவர் பானுபக்தா. இவர் 1868-ல் இறந்தார்.

பிரதமர் ஒலி மேலும் கூறும்போது, “பிர்குஞ்ச் மேற்குப் பகுதியில் உள்ள தோரியில் உண்மையான அயோத்தி உள்ளது. அயோத்தி மேற்கு பிர்குஞ்ச் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

ராமர்-சீதா திருமணம் அந்தக் காலக்கட்டத்தில் போக்குவரத்து, தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் அங்கு நடந்திருக்க வாய்ப்பில்லை.

தோரி என்ற இடம்தான் உண்மையான அயோத்தி. இங்குதான் ராமர் பிறந்தார். இந்தியாவில் அயோத்தி பற்றி பெரிய சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

ஆனால் எங்கள் அயோத்தியில் எந்த சர்ச்சைகளும் ஏற்படவில்லை. வால்மீகி ஆஸ்ரமம் நேபாளில் உள்ளது. குழந்தை பிறக்க தசரதர் மேற்கொண்ட சடங்குகள் நேபாளில் உள்ள ரிடி என்ற இடத்தில் நிகழ்ந்தவையே.

தசரதர் நேபாளத்தை ஆண்டார். அதனால் ராமரும் நேபாளத்தில்தான் பிறப்பதுதான் இயற்கை.

நேபாளத்தில் பல விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளும் அறிவுகளும் பிறந்தன, ஆனால் இந்த வளமையான மரபு பிற்பாடு தொடராமல் போனது.” என்று பேசியுள்ளார் பிரதமர் சர்மா ஒலி.