செய்திய கன்ஃபார்ம் பண்ணிட்டு போடுங்கய்யா: ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள்

உறுதி செய்யப்படாத ஊகங்களை செய்தியாக வெளியிட்டு தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம் என ஊடகங்களுக்கு சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காங்கிரஸ் வெற்றியடைந்த மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல் காந்தி இன்று தேர்வு செய்தார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இரவு வரை அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் இருக்கும் அசோக் கெலாட்டையும், சச்சின் பைலட்டையும் ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே , டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் பைலட், வெறும் வதந்திகளை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட தயாராக இருப்பதாகவும், தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.