ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து வைணவ கோயில்களில் நாளை பரமபத வாசல் திறப்பு..

பழையபடம்

ஆண்டு தோறும் மார்கழிமாத வளர்பிறை ஏகாதசியன்று சொர்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோயில்களில் நாளை அதிகாலை அதாவது டிசம்பர்-14- ஆம் தேதி நடைபெறவுள்ளது. 18-ஆண்டுகளுக்குப்பிறகு இந்தாண்டு கார்த்திகை மாதத்தில் பரமபத வாசல் திறப்பு நடைபெறுவது குறிப்படத்தக்கது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற இருப்பதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கத்தில் கடந்த 4-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. அன்று முதல் நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 மணிக்கு மோகினி அவதாரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை அதிகாலை 3.30 மணிக்கு புறப்பாடு செய்யப்பட்டு 4.45 மணிக்கு பரமபத வாசலை நம்பெருமாள் கடந்து செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நம்பெருமாள் புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2,050 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ திருக்கோயிலிலும் பரமபதவாசல் சிறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது