படிப்பைத் தொடர முடியாமல் தவித்த மாணவர்களுக்கு, மு.க.ஸ்டாலின் முயற்சியால் மருத்துவக் கல்லூரிகளில் இடம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் தவித்த 108 மாணவர்களுக்கு,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சியால், மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான திமுகவின் அறிக்கையில், பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரி மூடப்பட்டதால், மருத்துவ படிப்பை தொடர முடியாத மாணவர்கள் தொடர்ந்த வழக்கில்,

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களை 10 நாட்களுக்குள் இடம்மாற்றிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை பல நாட்கள் ஆகியும், நிறைவேற்றாததால், செய்வதறியாது திகைத்த மாணவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் முறையிட்டதாகவும்,

இதையடுத்து அவர் தலைமை செயலாளர், சுகாதார செயலாளர், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் ஆகியோரை விரைந்து செயலாற்றிட வலியுறுத்தி மனு அளித்ததாகவும், கூறப்பட்டுள்ளது.

அவரது முயற்சியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்போது, இடம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது