நீங்க சொன்ன எதையும் அரசு செய்யலீங்க…: உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார்

சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்புக் குழுவுக்கு தமிழக அரசு எந்த ஒத்துழைப்பும் அளிப்பதில்லை என ஐஜி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஐ ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது. மேலும் கோயில்களில் உள்ள சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் வழங்கி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிலைகளை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐஜி பொன்மாணிக்கவேல் குறிப்பிட்டார். அதற்கு அரசு தரப்பில் கோயில்கள் புனரமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் பாதுகாப்பு அறை கட்டுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோயில்களில் சிலைகள் பாதுகாப்பு அறை அமைப்பது தொடர்பாக அறிக்கையை ஜூலை 11ம் தேதி தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மேலும் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அதிகாரிகளை தனக்கு தெரியாமலும், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமலும் அரசு பணியிட மாற்றம் செய்வதாகவும் , நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவுற்கு அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை எனவும், ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம் சாட்டினார்.

இதைக் கேட்ட நீதிபதி நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்களை நீதிமன்ற அனுமதி இல்லாமல் பணியிட மாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றார். தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

தனியார் பொறுப்பில் இருக்கும் கோயில் சிலைகள் பாதுகாப்பாக இருக்கும் போது அரசு கட்டுபாட்டில் இருக்கும் கோயில் சிலைகள் மட்டும் எப்படி திருட்டு போகிறது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதேநிலை நீடித்தால் பல சிலைகள் தனியார் வசம் செல்லும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும் எனவும் வேதனை தெரிவித்தார். பழமையான கோயில்களின் சிலைகளைப் பாதுகாப்பது அரசின் கடமை எனவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள சிலைகளை பாதுகாக்க, பாதுகாப்பு அறைகள் அமைப்பது தொடர்பான விவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அன்று நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 11 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

​TN Govt No Cooperate: IG Pon Manickavel