திரையரங்குகளை திறக்க அனுமதியளித்த தமிழக முதல்வருக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி..

திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு. இன்று (ஆகஸ்ட் 23) முதல் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“கடந்த இரண்டு ஆண்டுகளைத் திரையுலகின் கருப்பு நாட்களாக்கிவிட்டது இந்த கரோனா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டன.

நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக்குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.

ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காணக் காத்திருக்கிறோம்.

திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடவைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.