உ.பி.யில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: 13 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு…


உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆள் இல்லாத லெவல் கிராஸிங்கை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. இதில், பள்ளிக் குழந்தைகள் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்தில் பலியானவ குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது வேதனையளிக்கும் தகவல்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வே செய்தி தொடர்பாளர் வேத் பிரகாஷ் கூறியதாவது:

டிவைன் பப்ளிக் பள்ளியின் மாணவர்கள் சென்ற வேன் ஒன்று குஷிநகர் அருகே பேவ்பூர்வா பகுதியில் உள்ள ஆள் இல்லா லெவல் கிராஸிங்கை கடந்தது. அப்போது அந்த வழியாக வந்த தாவே – கப்பட்டன்கஞ்ச் பயணிகள் ரயில் (ரயில் எண் 55075) வேனின் மீது மோதியது. இதில் 13 குழந்தைகள் பலியாகினர். விபத்து நடந்தபோது வேனில் பள்ளிக்குழந்தைகள் உட்பட 25 பேர் இருந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலா ரூ.2 லட்சம் இழப்பீடு:

ரயில் விபத்தில் பலியான குழந்தைகள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். கோரக்பூர் காவல் ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.