“பெண்களின் பாதுகாப்புக்காக என்றால் ஏன் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை?” : கனிமொழி கேள்வி

மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை சட்டம் என்று கூறும் மத்திய அரசு 33% மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி என்று கேள்வி எழுப்பினார்.

இஸ்லாமிய கணவர்கள் தங்கள் மனைவியிடம் ‘தலாக்’ என 3 முறை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை மசோதா (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாததால், முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் முடங்கியது.

இதையடுத்து குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் முத்தலாக் தடை மசோதாவை அவசர சட்டமாக மத்திய அரசு நிறைவேற்றியது.

தேர்தல் முடிந்து புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதால், இந்த முத்தலாக் தடை சட்ட மசோதா காலாவதியானது. இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா இன்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்த மசோதா குறித்து மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி, ”மத்திய அரசின் முத்தலாக் மசோதா குறிப்பிட்ட மதத்திற்கும், சமுதாயத்திற்கும் எதிரானது. நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களை பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்க தி.மு.க அனுமதிக்காது என்றார்.

குறிப்பிட்ட சமுதாயம் மற்றும் மதத்தை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த முத்தலாக் தடை சட்டத்தை தி.மு.க எதிர்க்கிறது” என்றார்.

மேலும், கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இந்த சிவில் விவகாரத்தை கிரிமினல் குற்றமாக எவ்வாறு கருத முடியும்.

எந்த ஒரு நாட்டிலாவது இப்படி ஒரு சட்டத்தை கொண்டுவர முடியுமா எனக் கேள்வி எழுப்பினார். இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்படுவது ஏன்? நாட்டில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களின் உரிமை குறித்து ஏன் அரசு அக்கறை கொள்ளவில்லை என்றார்.

மேலும், மகளிர் பாதுகாப்புக்காகவே முத்தலாக் தடை சட்டம் என்று கூறும் மத்திய அரசு 33% மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை.

பெண்களின் உரிமைகளை காப்பதாக கூறும் மத்திய அரசு, சபரிமலை விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.