இளைய தலைமுறையினர் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரானேஷ் போல் திகழவேண்டும்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பாராட்டு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவன் எம்.பிரானேஷ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைபுரிந்துள்ளார்.

வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (10.01.2023 ) கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 11-ஆம் வகுப்பு மாணவன் எம்.பிரனேஷ்க்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,

காரைக்குடி வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தற்போது 11-ஆம் பயின்று வரும் மாணவன் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரனேஷ் சதுரங்க போட்டியில் சாதித்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் குறிப்பாக நமது சிவகங்கை மாவட்டத்திற்க்கும் பெருமை சேர்த்து வரலாற்றில் இடம்பெற்றுள்ளார். கடந்த பத்தாண்டுகளாக சிறுவயதிலிருந்து சதுரங்க விளையாட்டில் சிறப்பான பயிற்சிகள் பெற்று, சர்வதேச அளவில் மாஸ்டர் பட்டம் பெற்று பெருமை சேர்த்தார்.

அதனைத் தொடர்ந்து, தற்போதும் “ஸ்வீடனில் நடைபெற்ற ரில்டன் கோப்பை சதுரங்கப் போட்டியில் பங்கேற்று 2,500 புள்ளிகள் பெற்று, இந்தியாவின் 79-வது கிராண்ட் மாஸ்டர் ஆகவும், தமிழ்நாட்டின் 28-வது கிராண்ட் மாஸ்டர் எனும் சிறப்பையும் பெற்று நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இனிவரும் காலங்களிலும் 2,600 புள்ளிகளை விரைவில் பெற்று,சூப்பர் கிராண்ட் மாஸ்டராக திகழ்வதற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவரது திறமையையும், ஆர்வத்தையும் வெளிக்கொணர்வதற்கு அடிப்படையாக இருந்த சதுரங்க கழக அமைப்பாளர்கள் மற்றும் பள்ளிகளை சார்ந்த நிர்வாகிகள், குறிப்பாக உறுதுணையாக இருந்த இவரின் பெற்றோர் பொருளாதார ரீதியாகவும் சமாளித்து, பல்வேறு இடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு பிரனேஷ் அவர்களை அனுப்பி வைத்த, அவருக்கான வாய்ப்பினை உருவாக்கி தந்து உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்தக் கொள்கிறேன்.

இளைய தலைமுறையினர் கிராண்ட் மாஸ்டர் எம்.பிரானேஷ் போல் திகழ்வதற்க்கு தங்களது தனித்திறனை்களை வெளிக்கொணர்வதற்கான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும்.
சதுரங்க போட்டியின் தாயகமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியினை கடந்த சூலை 2022-ல் சென்னை மாமல்லபுரத்தில் நடத்தி பெருமை சேர்த்தார்கள். மாண்புமிகு இளைஞர் நலன் மட்டும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களும், தற்போது விளையாட்டுத்துறையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததுடன் சிவகங்கை மாவட்டம் சார்பில் மாவட்ட அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் பாராட்டு விழா சிறப்பாக எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி எளிய குடும்பத்தை சார்ந்த மாணவன் பிரானேஷ் பெற்றோர் கடுமையாக உழைத்து தங்களின் மகளைன சாதனையாக்கியுள்ளார்கள். சில பள்ளிகள் தலைசிறந்த மாணவர்களை ஆசைவார்த்தை கூறி தங்கள் பள்ளிக்கு அழைத்திருப்பார்கள். அதனையெல்லாம் புறம்தள்ளி வித்யாகரி மெட்ரிக் பள்ளியில் தொடர்ந்து படிக்கவைத்துள்ளதற்கு பாராட்டுகள் என்றார்.

விழாவில் சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், வித்யாகிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சுவாமிநாதன்,காரைக்குடி நகர்மன்றத்தலைவர் எஸ்.முத்துதுரை, சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தலைவர் என்.கருப்பையா, செயலர் எம்.கண்ணன் மற்றும் பள்ளி முதல்வர் திருமதி ஹேமமாலினி சுவாமி நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்