மாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..

மாசிமகத்தை முன்னிட்டு கடற்கரையில் தீர்தவாரி நிகழ்வு நடைபெறும் இந்தாண்டு
காரைக்கால் அருகே மண்டபத்தூர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் வழிபாடு செய்தனர்..

காரைக்கால் மாவட்டத்தில் திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் பல்வேறு பெருமாள் கோயில்களில் இருந்து பெருமாள் எழுந்தருளி மாசி மகத் தீர்த்தவாரி நடைபெறுவதும்,

சிவன் மற்றும் வைணவ கோயில்களில் இருந்து சுவாமிகள் மண்டபத்தூர் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவதுமென இருவேறு இடங்களில் நடத்தப்படுவது சிறப்புக்குரிய நிகழ்ச்சிகளாகும்.

திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் கருட வாகனத்தில் திருமலைராயன்பட்டினம் எழுந்தருளி, பல்வேறு கோயில் பெருமாள்களுடன் கடற்கரைக்குச் சென்று தீர்த்தவாரி செய்வது மாலை நிகழ்வாக திங்கள்கிழமை நடத்தப்படுகிறது.

விமரிசையாக நடைபெறும் இந்த தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள திருவேட்டைக்குடி ஸ்ரீ திருமேனியழகர் கோயில், வரிச்சிக்குடி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாசி மகோத்ஸவம் நடைபெற்றுவரக்கூடிய 10 கோயில்களில் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி, சண்டிகேசுவரர், விநாயகர், முருகன், அர்ச்சுணன் உள்ளிட்ட சுவாமிகள் அந்தந்த கோயில்களில் இருந்து சிறப்பு அலங்காரத்தில், மாசிமகத் தீர்த்தவாரி தரும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் புறப்பட்டு மண்டபத்தூர் கடற்கரைக்கு வெவ்வேறு வாகனங்களில் பகல் 1 மணியளவில் சென்றடைந்தன.

கடற்கரையில் சுவாமிகள் சுமார் 2 மணி நேரம் இருந்தன. மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் அந்தந்த கோயில்களுக்கு புறப்பாடு செய்யப்பட்டது.