2 நாள் பயணமாக கோவை வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக கோவை விமான நிலையம் வந்த முதல்வர்மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் பேசுகிறார்.

கோவையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு அரசு கட்டிடங்களை திறந்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பயனாளிகளுக்கு, அரசு நல உதவிகளை வழங்க உள்ளார். இதன்பிறகு கோவையில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை 11 மணிக்கு கொடிசியா அரங்கில் நடக்கும் முன்னணி நிறுவனங்களின் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வரின் இன்று கோவை செல்ல உள்ள நிலையில் #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக்கின் கீழ் முதல்வருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.